மாடர்ன் உடை அணிந்ததால் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

776

கன்னியாகுமரி..

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த மூலச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபபிரின்சா. இவரும், அழகியமண்டபம் பகுதியைச் சேர்ந்த எபனேசன் என்பவரும் 15 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஜெபபிரின்சா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் அழகு கலை பயிற்சி பெற்றுள்ளார்.

இதன் பின்னர் ஜெபபிரின்சாவின் ஆடை அலங்காரங்களை மேற்கொள்வதில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.


இந்நிலையில், நேற்று இரவு எபனேசன் தனது மனைவியை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்படவே பிரச்சினை உச்சகட்டத்தை எட்டியது.

அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளைக் கொண்டு எபனேசன் தனது மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஜெபபிரின்சா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தக்கலை காவல் துறையினர் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இனைத் தொடர்ந்து ஜெபபிரின்சாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து எபனேசனைத் தேடி வந்தனர்.

காவல் துறையினரின் கைதுக்கு பயந்து அவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.