விசாகப்பட்டினத்தில்..

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாராசந்த் நாயக் (34). இவருக்கும், புஷ்பாவதி (30) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆரம்பத்தில், நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் குடும்ப வாழ்க்கையில் கடந்த சில ஆண்டுகளாக திடீரென புயல் வீச ஆரம்பித்தது.

இதற்கு தாராசந்தின் சந்தேக புத்தியே காரணம் எனக் கூறப்படுகிறது. மனைவியை எப்போது பார்த்தாலும் சந்தேகப்பட்டு சண்டை போடுவதை தாராசந்த் வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்த சூழலில், இன்று காலை கணவன் – மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறை அடுத்து தாராசந்த் வீட்டை விட்டு கோபமாக வெளியே சென்றார். இதையடுத்து, சில மணிநேரங்கள் கழித்து தாராசந்த் வீடு திரும்பினார்.

இதனைத் தொடர்ந்து, கோபமாக இருந்த தனது மனைவி புஷ்பாவதியை சமாதானம் செய்ய முயன்றுள்ளார் தாராசந்த். ஆனால், புஷ்பாவதி சமாதானம் ஆகவில்லை.
இதனால் சினிமா பாணியில் மனைவியை சமாதானப்படுத்த நினைத்த தாராசந்த், புஷ்பாவதியின் உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். புஷ்பாவதி விலக முயன்றும் அவரை விடாப்பிடியாக பிடித்து முத்தம் கொடுத்திருக்கிறார் தாராசந்த்.

இதனால் ஆத்திரமடைந்த புஷ்பாவதி, முத்தம் கொடுத்து கொண்டிருக்கும் போதே தாராசந்தின் நாக்கை நறுக்கென விடாமல் கடித்தார். இதில் தாராசந்தின் நாக்கு துண்டாகி தொங்கியது. அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர், அங்கு வந்து தாராசந்த்தை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுதொடர்பாக தனது மனைவி மீது போலீஸிலும் தாராசந்த் புகார் அளித்துள்ளார். மேலும், தனது மனைவியுடன் வாழவே தனக்கு பயமாக உள்ளதாகவும், அவரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.















