பெங்களூரு..

பெங்களூருவைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர் தனது மேட்ரிமோனி ப்ரொபைல் மூலமாக இளைஞர் ஒருவரை நேர்காணலுக்கு அழைத்த சம்பவம் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.

திருமணத்திற்கு வரன் தேடுவது மிகவும் சவாலான காரியமாக இருந்த காலகட்டம் இப்போது மலையேறி விட்டது என்றே சொல்லலாம். முன்பெல்லாம் உறவினர்கள் மூலமாகவும் நண்பர்கள் மூலமாகவும் வரன்கள் பார்க்கப்படும். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்புத் துறையில் நிகழ்ந்து வரும் மகத்தான மாற்றங்கள் திருமணத்திற்கு வரன் தேடுவது உள்ளிட்ட பல காரியங்களை சுலபமாக மாற்றி இருக்கிறது.

தற்போதைய காலகட்டத்தில் ஆணும் பெண்ணும் தங்களது சுய விவரக் குறிப்புகளை தெளிவாக உள்ளீடு செய்து புகைப்படத்தை இணைத்து தாங்கள் எதிர்பார்க்கும் குணங்கள் குறித்து பதிவிட்டால் போதும். அவர்களுக்கான இணையை தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்க பல்வேறு மேட்ரிமோனி தளங்கள் வரிசையில் நிற்கின்றன.

இதனாலேயே பல பெற்றோரும் இத்தகைய தளங்களில் தன்னுடைய மகன், மகளுக்கு வரன் தேடுவதில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர். ஆனால் பெங்களூருவைச் சேர்ந்த ஒருவருக்கு இதன்மூலம் வினோத அனுபவம் ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்தவர் உதிதா பால். இவர் தனியார் நிறுவனம் ஒன்றின் இணை நிறுவனராக இருக்கிறார். இந்நிலையில் இவருக்கு வரன் தேடி வருகிறார்கள் இவருடைய பெற்றோர். அதற்காக இவருடைய சுய விவரக் குறிப்பை தனியார் மேட்ரிமோனி தளத்தில் பெற்றோர் பதிவிட்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் உதிதாவின் ப்ரொபைல் பார்த்து விருப்பம் தெரிவித்து இருந்த ஒரு இளைஞரின் விபரங்களை பார்த்து விட்டு அவரை நேர்காணலுக்கு அளித்திருக்கிறார் பால். இதனை அறிந்த உதிதாவின் தந்தை “மேட்ரிமோனி மூலமாக யாரையும் வேலைக்கு எடுக்க கூடாது” என வாட்ஸாப்பில் வசை பாடியுள்ளார். இந்த வாட்சாப் உரையாடலை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து உதிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் அதைத் தொடர்ந்து மற்றொரு பதிவையும் பால் எழுதியுள்ளார். அதில், அந்த இளைஞர் வருடத்திற்கு 62 லட்ச ரூபாய் ஊதியம் கேட்பதாகவும் தன்னுடைய நிறுவனத்தால் அவ்வளவு ஊதியம் கொடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மேட்ரிமோனி தளத்தில் தனது ப்ரோபைலை நீக்கவும் தனது தந்தையிடம் கூறியதாக பால் குறிப்பிட்டுள்ளார்.

மேட்ரிமோனி மூலமாக இளைஞர் ஒருவரை நேர்காணலுக்கு எடுக்க முயற்சித்த இளம் பெண் தொழிலதிபரின் செயல் பலரையும் திகைப்பில் ஆழத்தியுள்ளது.















