சேலத்தில்..
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் இளைஞர் சஞ்சய். 18 வயதான இவர் சேலத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். சிறுவயதிலிருந்து இவருக்கு சட்டம் படிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்ததால் இந்த படிப்பை சஞ்சய் விரும்பி தேர்ந்தெடுத்துள்ளார்.
இவரது சொந்த ஊர் தருமபுரி என்பதால், நண்பர்களுடன் சேர்ந்து வீடு ஒன்றை தனியாக எடுத்து தங்கி பயின்று வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் இதே கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்த மற்றொரு இளம்பெண்ணுக்கும் இடையே நட்பு மலர்ந்திருக்கிறது.
இதனையடுத்து இருவரும் அடிக்கடி வெளியே சுற்றியுள்ளனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக பரிணமித்திருக்கிறது. பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். ஆனால் இந்த விஷயம் மாணவியின் தாய்க்கு தெரிய வரேவே அவர் மாணவியை கடுமையாக கண்டித்திருக்கிறார்.
இதனால் மாணவியால் முன்பு போல வெளியே வரமுடியவில்லை. எனவே மாணவன் சஞ்சய் மாணவியை பார்க்க அவரது வீட்டிற்கு வருவதாக கூறியுள்ளார். ஆனால் வீட்டில் தனது தாய் இருப்பதால் வரவேண்டாம் என்று கூறியுள்ளார்.
இப்படியே போய்க்கொண்டிருக்கையில், ஒருநாள் அதிகாலையில் சந்திக்கலாம் என்று திட்டமிட்டுள்ளனர். திட்டமிட்டபடி சஞ்சய் அதிகாலையில் மாணவியின் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றிருக்கிறார்.
இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார். இந்த ஐடியா சரியாக இருந்ததால் வாரத்திற்கு மூன்று நாட்கள் என சஞ்சய் தனது காதலியின் அடுக்குமாடி குடியிருப்பு சென்றிருக்கிறார். அதேபோல மாணவியும் அதிகாலையில் எழுந்து மொட்டை மாடிக்கு வந்திருக்கிறார்.
இந்நிலையில், நேற்றும் வழக்கம்போல சஞ்சை அடுக்குமாடி குடியிருப்புக்கு வர, மாணவி குறிப்பிட்ட நேரத்திற்கு வரவில்லை. மாணவிக்கு தொடர்ந்து போன் செய்து பார்த்ததில் அவர் போனை எடுக்கவில்லை.
நீண்ட நேரத்திற்கு பின்னர் மாணவி வந்திருக்கிறார். ஏன் தாமதம் என்று கேட்கையில், அம்மா திடீரென விழித்துக்கொண்டார்கள் என்றும், அதனால்தான் தாமதமாகிவிட்டது என்றும் கூறியுள்ளார்.
பின்னர் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் கீழே மாணவியின் தாய் சீக்கிரமாக விழித்துக்கொண்டு தனது மகளை காணாமல் தேடியுள்ளார்.இதனையடுத்து மொட்டை மாடிக்கு வரவே இவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர்.
தனது காதலியின் தாய் வருவதை அறிந்த இளைஞன் அங்கிருந் தப்பிக்க 50 அடி உயர மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தை அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தெரிவித்த நிலையில், அஸ்தம்பட்டி சரக காவல் உதவி ஆணையர் லட்சுமி பிரியா தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மாணவன் சஞ்சய்யின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலியை பார்க்கச் சென்று அவரின் தாய்க்கு பயந்து தப்பிக்க மாடியிலிருந்து குதித்ததில் மாணவன் உயிரிழந்துள்ளது சக மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.