
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கணினி மின் பொறியாளராக பணிபுரிந்து வந்த ரோஷினி எனும் இளம்பெண், வீட்டில் மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பட்டறை தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். இவரது மனைவி ரோஷினி (29). இவர் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிகிறார்.
தற்போது வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் வீட்டிலிருந்தவாறே ஆன்லைன் மூலம் பணிகளை செய்து வந்தார். இந்நிலையில் அவரது வீட்டில் உள்ள மின் மோட்டாரை இயக்கியபோது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் துடிதுடித்து மயங்கி கீழே விழுந்தவரை உறவினர்கள் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உசிலம்பட்டி போலீஸார், பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து பெண் பலியானது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.















