ராட்சத அலைகளுடன் ஊருக்குள் புகுந்த கடல்நீர்: சுனாமி என ஓட்டம்பிடித்த மக்கள்!!

393

கேரளாவில் கொச்சி அருகே ராட்சத அலைகளுடன் கடல்நீர் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கொச்சியை அடுத்த கடற்கரைப்பகுதிகளான செல்லனம், வைப்பின், நாயாரம்பலம் மற்றும் எடவனக்காடு பகுதியில் நேற்று முன்தினம் கடல் தொடர்ந்து சீற்றத்துடன் இருந்தது.

இந்நிலையில் திடீரென ராட்சத அலைகளுடன் கிராமத்திற்குள் கடல்நீர் புகுந்தது, இதில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மிதந்தன.

தடுப்பு சுவரை துளைத்துக் கொண்டு நீர் வந்ததால் பொதுமக்கள் பதறிப்போயினர்.


இந்நிலையில் நேற்றும் இதேபோன்று கடல் சீற்றத்துடன் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் மீண்டும் சுனாமி வந்துவிட்டதாக நினைத்து பொதுமக்கள் அச்சம் அடைந்து உயரமான இடங்கள் மற்றும் மாடிகளுக்கு குழந்தைகளுடன் ஓடினர்.

தங்கள் வாழ்நாளில் இதுபோன்ற பெரிய அலைகளை பார்த்ததில்லை எனக்கூறும் கிராம மக்கள், ஓக்கி புயலின் போது கூட கடல் அலையில் இவ்வளவு சீற்றம் இருந்ததில்லை என தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 1,500-க்கும் மேற்பட்டோர் அந்த பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே கடல்நீரால் சுகாதார சீர்கேடு ஏதும் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.