திருச்சூரில்..
திருச்சூரில் ஓட்டல் அறையில் கள்ளக்காதலிக்கு அளவுக்கு அதிகமாக மதுகுடிக்க வைத்து கழுத்தை நெரித்து கொன்று வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரஸ்மா (31). கணவரை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது 6 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் பாலக்காட்டைச் சேர்ந்த கிரிதாஸ் (39) என்பவருடன் ரஸ்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கிரிதாஸ் ரஸ்மாவின் அண்ணனின் நண்பர் ஆவார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. 2 பேரும் அடிக்கடி பல்வேறு இடங்களில் ரகசியமாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதற்கிடையே 2 பேரும் திருமணம் செய்ய தீர்மானித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு கள்ளக்காதலர்கள் திருச்சூரில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
ஆனால் நேற்று பகல் முழுவதும் அவர்கள் தங்கி இருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது கிரிதாஸ் தூக்கு போட்டு இறந்த நிலையில் சடலமாக கிடந்தார்.
ரஸ்மா கட்டிலில் இறந்து கிடந்தார். இது குறித்து திருச்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். அதைத் தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதலில் 2 பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதினர்.
ஆனால், தீவிர விசாரணையில் ரஸ்மாவுக்கு கிரிதாஸ் அதிக அளவு மது கொடுத்து பின்னர் அவரை கழுத்தை நெரித்துக் கொன்றது தெரியவந்தது. ரஸ்மா இறந்ததை உறுதி செய்த பிறகு கிரிதாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 2 பேரும் திருமணம் செய்ய தீர்மானத்திருந்த போதிலும் ரஸ்மா திருமணத்திற்கு மறுத்து விடுவாரோ? என்ற சந்தேகத்தின் பேரில் அவரை கிரிதாஸ் கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.