லண்டனில் மார்பில் சுடப்பட்ட தமிழ்ச் சிறுமி.. தன்னை சுட்டவர்களிடம் கூற விரும்பும் விடயம்!!

255

லண்டனில்..

சிறுவயதில் துப்பாக்கியால் சுடப்பட்டு சக்கர நாற்காலியில் வாழும் நிலைக்கு ஆளான இலங்கைத் தமிழ் இளம்பெண் ஒருவர், தன்னை சுட்டவர்களுக்கு கூற, தன்னிடம் ஒரு விடயம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு லண்டனில் அமைந்துள்ள, தன் உறவினரின் மளிகைக்கடையில் விளையாடிக்கொண்டிருந்த துஷா கமலேஸ்வரன் என்னும் அந்த ஐந்து வயது இலங்கைத் தமிழ்ச் சிறுமிக்கு, அன்று தன் வாழ்வே மாறப்போகிறது என்பது தெரியாது.

அந்த கடைக்குள் நுழைந்த போதைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர், தங்கள் எதிராளி ஒருவரை துப்பாக்கியால் சுட, அந்த நபர் தப்பிக்கொள்ள, துப்பாக்கிக் குண்டு விளையாடிக்கொண்டிருந்த துஷாவின் மார்பைத் துளைத்துக்கொண்டு சென்று அவளது முதுகெலும்பைத் தாக்கியது. இரத்த வெள்ளத்தில் சாய்ந்த துஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில்,


அவளது முதுகெலும்பில் குண்டு தாக்கியதால், அவளால் நடக்கமுடியாது என்னும் துயரச் செய்தியை அவளது பெற்றோரான சசி மற்றும் ஷர்மிளா தம்பதியருக்குத் தெரிவித்தார்கள் மருத்துவர்கள்.

தற்போது 18 வயதாகிறது துஷாவுக்கு. நடனத்தில் விருப்பம் கொண்ட துஷாவின் நடனக் கனவுகளை அந்த போதைக் கும்பல் கலைத்துவிட்டதால், அவளால் இனி நடனமாட முடியாது.

துஷாவின் இன்னொரு விருப்பம், மருத்துவராவது. தன்னைக் காப்பாற்றிய மருத்துவர்களைப் போல, தானும் ஒரு மருத்துவராக விரும்புகிறார் துஷா. தன்னை சுட்டவர்களை சந்தித்து அவர்களிடம் சில விடயங்களைக் கூறவேண்டும் என விரும்புகிறார் துஷா. அவர்களுடைய கண்களை நேருக்கு நேராக பார்க்கவேண்டும், சிறையிலிருந்தபோது அவர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள்,

தாங்கள் செய்த குற்றத்தின் விளைவுகளை அவர்கள் புரிந்துகொண்டார்களா என்பதை தான் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிறார் அவர். சில விடயங்களுக்காக அவர்களை நான் மன்னிக்கிறேன், ஆனால்,

சில விடயங்களுக்காக அவர்களை என்னால் மன்னிக்கமுடியாது என்கிறார் துஷா. அவர்கள் என் பிள்ளைப்பிராயத்தின் சில பகுதிகளைத் திருடிவிட்டார்கள். அவர்கள், நான் என்ன சாதித்துள்ளேன் என்பதைப் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறும் துஷா,

நான் கேம்பிரிட்ஜ் பல்கலையில் மருத்துவம் படிக்கிறேன், நான் என் வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டிருக்கிறேன், அவர்கள் என்ன செய்கிறார்கள் என நான் பார்க்க விரும்புகிறேன் என்கிறார்.

ஒரு மருத்துவராகி, எனக்குக் கிடைத்த அக்கறையை, கவனிப்பை, என்னைப் போல் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு, நான் கொடுப்பேன், அதுதான் என் கனவு என்கிறார் துஷா.