வகுப்பறையில் சுருண்டு விழுந்த 16 வயது மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

503

மத்தியப் பிரதேசம்…

மத்தியப் பிரதேசம் இந்தூரின் உஷா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாணவி விரிந்தா திரிபாதி (16). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்த திரிபாதி, அன்றைய தினம் பள்ளிக்கு வழக்கம் போல சென்றார்.

திரிபாதியின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கமான வகுப்புகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில், சுமார் 12 மணி அளவில் திடீரென வகுப்பறையிலேயே திரிபாதி மயங்கி சரிந்து விழுந்தார்.

திடீரென மாணவி வகுப்பறையில் சரிந்து நிலைக்குலைந்து கீழே விழுந்ததும் பதறிப் போன ஆசிரியர்கள் உடனடியாக மாணவியை தூக்கிக் கொண்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.


அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். மாரடைப்பு ஏற்பட்டதே மாணவியின் மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த செய்தி அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாணவி விரிந்தாவுக்கு எந்த நோய் பாதிப்பும் இல்லை. சம்பவ தினத்தன்று இந்தூரில் வழக்கத்தை விட குளிர் அதிகமாக இருந்துள்ளது.

மாணவி மெலிதான விளையாட்டு பயிற்சிக்கான உடைகளை அணிந்து கொண்டு குடியரசு தின விழா ஒத்திகையைச் செய்துள்ளார்.மேலும், அந்த நேரத்தில் அவர் சில நொறுக்கு தீனிகளையும் சாப்பிட்டுள்ளார். மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட இவை காரணிகளாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

உயிரிழந்த மாணவியின் சொந்த ஊர் ஊஜ்ஜைனி ஆகும். அவரின் தந்தைக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பதால் அவரது தாய் மாமா வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இந்துரைச் சேர்ந்த முஸ்கான் என்ற சமூக தொண்டு நிறுவனம் மாணவியின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு கண் தானத்திற்காக கோரிக்கை வைத்தது. அவர்களின் கோரிக்கையை ஏற்று உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினர் அவரது கண்களை தானம் செய்துள்ளனர்.

குளிர் காலத்தில் இருதயம் சார்ந்த பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.