விமானத்தில் வந்து திருநங்கை படுகொலை.. ஆளை மாற்றி கொன்றதாக டிவிஸ்ட் கொடுத்த ஐ.டி ஊழியர்!!

254

ஐ.டி ஊழியர் திருநங்கையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை தெலுங்குபாளையம் எல்ஐசி காலனியை சேர்ந்தவர் தனலட்சுமி (39). திருநங்கை. கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன் மும்பைக்கு சென்றார்.

இவரது தோழி திருநங்கை மாசிலாமணி (32) வடவள்ளி அருகே மருதமலை சாலையில் அன்னை இந்திரா நகரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், தைப்பூசத்துக்கு மும்பையில் இருந்து கோவை திரும்பிய தனலட்சுமி, மாசிலாமணி வீட்டில் தங்கினார்.

கடந்த மாதம் 29ம் தேதி மாசிலாமணி வெளியே சென்றுள்ளார். வீட்டில் தனலட்சுமி மட்டும் தனியாக இருந்தார். அப்போது, ​​வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், தனலட்சுமியை சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடினார்.

இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப் பதிந்து 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். சென்னை மடிப்பாக்கம் அருகே உள்ள பிருதிவாக்கத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் தினேஷ் (எ) தினேஷ் ராமசாமி (38) என்பவர் திருநங்கை தனலட்சுமியைக் கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: கோவை மருதமலை முருகன் கோவிலுக்கு தினேஷ் அடிக்கடி செல்வார்.கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று மருதமலைக்கு வந்த தினேஷ், மருதமலை பஸ் நிலையத்தில் அமர்ந்து இருந்தார்.


அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் தினேஷை தாக்கி அவரிடம் இருந்த ஏடிஎம் கார்டு மற்றும் பணப்பையை பறித்ததாக தெரிகிறது. பின்னர் கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் மருதமலைக்கு வந்தார். அவரை தாக்கி பணம் பறித்தவர்கள் அப்பகுதியில் இருக்கிறார்களா? என்று தேடினார்.

அப்போது, ​​திருநங்கை மாசிலாமணி, மணி வசித்த வீட்டின் அருகே தினேஷ் சென்றார். இதைப் பார்த்த மாசிலாமணியும், அவரது நண்பர் மணியும் தினேஷிடம் போனார்கள், நீங்கள் யார்? என்று கேட்டுள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், தினேஷை தாக்கினர். அப்போது தினேஷை தேடி அவரது பெற்றோர் அங்கு வந்தனர். அப்போது, ​​தினேஷின் பெற்றோரையும் மாசிலாமணி தாக்கியுள்ளார். தன் கண்முன்னே பெற்றோரை தாக்கியதால் மாசிலாமணி மீது கோபம் கொள்கிறார் தினேஷ்.

பழிவாங்க நினைத்தவர், சென்னையில் இருந்து கோவை வந்து, கடந்த 29ம் தேதி இரவு, மாசிலாமணியை கொல்வதற்காக, அவரது வீட்டுக்குச் சென்றார். மாசிலாமணியும் மணியும் அங்கு இல்லை.

திருநங்கை தனலட்சுமி மட்டும் தூங்கிக் கொண்டிருந்தார். மாசிலாமணி தான் என நினைத்து தினேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனலட்சுமியை சரமாரியாக குத்தி கொன்றார்.

திருநங்கை மாசிலாமணி என நினைத்து தனலட்சுமியை தினேஷ் கொன்றதாக கூறப்படுகிறது. கொலையை செய்துவிட்டு பழனிக்கு சென்று மொட்டையடித்துவிட்டு மதுரை சென்றார். அங்கு தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.