
வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்த இளம்பெண்ணும், தங்களையும் காதலனுடன் சேர்த்து வைக்க மாட்டார்கள் என்று அஞ்சிய இளம்பெண்ணின் 2 தோழிகளும்
சேர்ந்து மூன்று பேருமாக விஷம் குடித்து கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகா கே.இரபகேரா கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா(18). அதே கிராமத்தைச் சேர்ந்த இவரது தோழிகள் சுனிதா(17) மற்றும் திம்மக்கா(18).
இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் விஷம் குடித்துவிட்டு, அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இது குறித்து அறிந்த கிராம மக்கள் ரேணுகா, சுனிதா, திம்மக்கா ஆகிய 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ரேணுகா மட்டும் இறந்து விட்டார். தகவல் அறிந்ததும் தேவதுர்கா போலீசார் கிராமத்திற்கு சென்று விசாரித்தனர்.
போலீசாரின் விசாரணையில், ரேணுகா ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், அவரது குடும்பத்தினர் வேறு ஒரு வாலிபரை பார்த்து திருமணம் பேசி முடிவு செய்துள்ளதும் தெரிய வந்தது.
இன்னும் சில நாட்களில் அந்த வாலிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் காதலனை மறக்க முடியாமல் தவித்த ரேணுகா தற்கொலை செய்தது தெரிய வந்தது.
அதுபோலவே மற்ற இரு தோழிகளான திம்மக்கா மற்றும் சுனிதாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தங்களுக்கும் வேறு மாப்பிள்ளையை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என நினைத்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
அவர்கள் 2 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தேவதுர்கா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.















