இந்தோனேசியாவில்..

இந்தோனேசியாவின் பாலித்தீவுக்கு சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த புதுமண தம்பதி லோகேஸ்வரன் விபூஷினியா மோட்டார் படகில் பயணம் செய்த போது படகு கவிழ்ந்து உயிரிழந்தனர். இவர்களுக்கு கடந்த 1ம் தேதி தான் திருமணம் நடைபெற்ற நிலையில் புதுமணத் தம்பதி இருவரும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரன். இவர் சென்னை பூந்தமல்லியை சேர்ந்த விபூஷினியா என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மருத்துவர்கள் ஆன இருவரும் தங்கள் காதலை வீட்டில் கூறிய நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஒன்றாம் தேதி லோகேஸ்வரன் மற்றும் விபூஷினியா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

புதுமண தம்பதிகள் ஹனிமூன் செல்லலாம் என எண்ணிய நிலையில் இந்தோனேசியாவின் பாலிதீவுக்கு செல்ல முடிவெடுத்தனர். காதல் தம்பதி பாலி தீவுக்கு சென்ற நிலையில் அங்கு மோட்டார் படகில் பயணித்ததாக தெரிகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்துள்ளது. இதில் நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்துள்ளனர். திருமணமான சில நாட்களிலேயே காதல் தம்பதி பலியான சம்பவம் இரு வீட்டார் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.















