சென்னையில்..

சென்னை போயஸ்கார்டன் ராகவீரா அவென்யூ சாலையில் வசித்து வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனது வீட்டின் லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் நகைகளை காணவில்லை என ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் வைர கற்கள், நெக்லஸ், தங்க நகைகள் என சுமார் 60 சவரன் நகைகளை வீட்டில் உள்ள லாக்கரில் வைத்ததாக குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தையான நடிகர் ரஜினிகாந்த் வீட்டிலும்,

நடிகர் தனுஷ் வீட்டிலும் அந்த நகைகளை மாறி மாறி வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பணிபுரியும் பெண்களை அழைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களிடம் நடத்திய விசாரணையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பணிபுரிந்து பின் நடிகர் தனுஷ் வீட்டில் பணிபுரிந்து வந்த ஈஸ்வரி(46) என்ற பெண் ஆறு மாதத்திற்கு முன்பு திடீரென வேலையில் இருந்து நின்று விட்டதாக தெரிய வந்தது.

இதில் சந்தேகம் அடைந்த போலீசார் மந்தைவெளி பள்ளி வாசல் தெரு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரியை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது கடந்த 18 ஆண்டுகளாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

மேலும், கடந்த 2019 -ம் ஆண்டில் இருந்து சிறுக சிறுக நகைகளை திருடியதும் தனது கணவர் அங்கமுத்து வங்கிக் கணக்கில் பணத்தை போட்டு வைத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ஈஸ்வரியை கைது செய்த தேனாம்பேட்டை போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த திருவேற்காட்டைச் சேர்ந்த வெங்கடேசன்(44) என்பவர் உதவியுடன் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணம் என சிறுக சிறுக பல ஆண்டுகளாக திருடி வந்ததும் தெரிய வந்தது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகாரில் திருடப்பட்டதாக சொன்ன 60 சவரன் நகைகள் மட்டுமின்றி சுமார் 110 சவரன் நகைகள், வைர கற்கள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் என ஈஸ்வரியும் கார் ஓட்டுனரான வெங்கடேசனும் இணைந்து திருடி வந்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது.

மேலும் திருடிய நகை மற்றும் பணத்தின் மூலம் சோழிங்கநல்லூர் அருகே ரூ.85 லட்சம் மதிப்பில் ஈஸ்வரி வீடு வாங்கி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஈஸ்வரி மற்றும் வெங்கடேசனிடமிருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டு பத்திரம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், மைலாப்பூரில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ள 350 கிராம் நகைகளை மீட்கும் முயற்சியில் தேனாம்பேட்டை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.















