
சேலம் மாவட்டத்தில் பாட்டி வீட்டில் தங்கியிருந்து 12ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி திடீரென மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்து பெற்றோர்கள் பதற்றத்துடன் மாணவியைத் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, முல்லைவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னம்மாள் (35). இவரும், இவரது கணவர் வெங்கடேசனும் முல்லைவாடி கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
வெங்கடேசன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவரது மகளும், மகனும் சின்னசேலத்தில் உள்ள சின்னம்மாளின் தாயாரான தங்களது பாட்டி வீட்டில் தங்கியிருந்தபடி படித்து வந்தனர்.
இவர்களது மகள் காயத்திரி (17) சின்னசேலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 24ம் தேதி பள்ளிக்கு செல்லாமல் பாட்டிக்கு உதவியாக வீட்டில் இருந்த காயத்திரி, அன்றைய தினம் மதியம் வெளியே சென்று விட்டு வருவதாக பாட்டியிடம் கூறி விட்டு சென்றவர், அதன் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடிப்பார்த்தும் காயத்ரி கிடைக்காததால் இது குறித்து சின்னம்மாள், சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, மாயமான காயத்ரியைத் தேடி வருகின்றனர்.















