ஈரோட்டில்..

ஈரோடு மாவட்டம் கருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்த 16 வயது சிறுமியிடம் பழகி வந்த நிலையில் ஆசைவார்த்தை கூறி சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், சிறுமி நான்கு மாதம் கர்ப்பமாகியுள்ளார்.

இதனையடுத்து, மாணவியின் கர்ப்பத்தை கலைக்க சிறுவனின் தாய், தந்தை, கிளாம்பாடி பேரூராட்சி தலைவி அமுதா மற்றும் பள்ளிக்கூட பெண் ஊழியர் சிவகாமி ஆகியோர் கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருகலைப்பு செய்ய முயன்றுள்ளனர்.

ஆனால் தனியார் மருத்துவமனை கருக்கலைப்பு செய்ய மறுத்துவிட்டது. ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே சிறுமியின் பெற்றோர் மலையம்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, சிறுவன், சிறுவனின் தந்தை, தாய், பேரூராட்சி தலைவி அமுதா, பள்ளிக்கூட பெண் ஊழியர் சிவகாமி ஆகியோர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் சிறுவனின் தந்தை, தாய் மற்றும் பேரூராட்சி தலைவி அமுதா ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சிவகாமி மற்றும் சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.















