4 மணிநேரம் லேட்டா வந்த மாப்பிள்ளை.. மணப்பெண்ணின் ‘அப்பா’ செஞ்ச காரியம் : அதிர்ந்துபோன கல்யாண வீடு!!

592

மகாராஷ்டிரா..

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள மல்காப்பூர் பங்கரா கிராமத்தில் கடந்த 22-ம் தேதி திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. இதற்காக நல்ல நேரம் பார்க்கப்பட்டு, மாலை 4 மணிக்கு திருமணம் நடைபெற இருந்தது. இதனால் அன்றைய தினம் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக செய்யப்பட்டன.

மாலை மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் மண்டபத்துக்கு வந்துள்ளனர். ஆனால் மணமகன் வீட்டார் நீண்ட நேரமாக வராமல் இருந்துள்ளனர். இதனை அடுத்து திருமணம் குறிக்கப்பட்ட 4 மணியை கடந்து 5, 6 என சென்றுள்ளது. ஆனாலும் மணமகன் மண்டபத்துக்கு வரவில்லை.

இந்த நிலையில் மணமகன் தனது நண்பர்களுடன் மது குடித்துவிட்டு நடனமாடிக் கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, மதுபோதையில் இருந்த மணமகன் இரவு 8 மணிக்கு மண்டபத்துக்கு வந்துள்ளார்.


மேலும் குடிபோதையில் இருந்த நண்பர்கள் மண்டபத்தில் அலப்பறை செய்துள்ளனர். இதனால் மணமகள் மற்றும் மணமகன் குடும்பத்தினரிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இதை அனைத்தையும் அமைதியாக கவனித்த மணமகளின் தந்தை, மதுபோதையில் இருந்த மணமகனுக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டார். உடனே திருமணத்திற்கு வந்த உறவுக்காரர் இளைஞரிடம் ஆலோசனை நடத்தி அவருக்கே தனது மகளை மணமுடித்து வைத்துள்ளார்.

இதுகுறித்து கூறிய மணமகளின் தந்தை, ‘ஏப்ரல் 22-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. மணமகன் குடும்பத்தினர் நடனம் ஆடுவதில் பிசியாக இருந்தனர். மாலை 4 மணிக்கு நடக்க இருந்த திருமணத்துக்கு இரவு 8 மணிக்குதான் வந்தனர். அதனால், எனது மகளை என்னுடைய உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டேன்’ எனக் கூறியுள்ளார்.