4 வயது சிறுவனை கொலை செய்த தம்பதி வழக்கில் திடீர் திருப்பம் : வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்!!

1183

கன்னியாகுமரி..

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜாண் ரிச்சார்ட் தற்போது இவர் வெளி நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இவரது மனைவி சகாய சில்ஜா 4-வயது மகன் ஜோகன் ரிஷி மற்றும் மகள் கடியப்பட்டணம் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் சிறுவன் ஜோகன் ரிஷி 21-ம் தேதி மதியம் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த போது திடீரென மாயமானார். உடனடியாக அக்கம் பக்கத்தில் தேடி சிறுவன் கிடைக்காத நிலையில் தாயார் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.


புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சிறுவன் மாயமான நேரம் கழுத்து மற்றும் கையில் தங்க நகைகள் அணிந்திருந்ததால் நகைக்காக கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகமடைந்த போலீசார் பக்கத்து வீட்டை சேர்ந்த பாத்திமா என்ற பெண் மீது சந்தேகமடைந்து, அவரை 22-ம் தேதி விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இதற்கிடையில் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பாத்திமா வீட்டை அடித்து நொறுக்கி சூரையாடிய போது பீரோவும் உடைந்தது அதில் அந்த சிறுவன் வாய் துணியால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

இதைக்கண்ட அவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், பாத்திமாவின் வீட்டை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதோடு அவரை உடனடியாக கைது செய்ய கோரி ஊரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் போலீசார் பாத்திமாவிடம் விசாரணை நடத்தியதில் ஒன்றரை சவரன் நகைக்கு ஆசைப்பட்டு, மதியம் தனது வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவனை அன்பாக வீட்டிற்குள் அழைத்து சென்று கை,

கால்களை கட்டி தலையணையால் சிறுவனின் முகத்தில் அழுத்தி கொலை செய்து, நகைகளை திருடி சிறுவனின் சடலத்தை பீரோவில் மறைத்து வைத்து கணவருடன் சேர்ந்து இரவோடு இரவாக கடலில் வீச திட்டமிட்டிருந்ததாகவும் கூறினார்.

இதனையடுத்து பாத்திமா மற்றும் அவரது கணவர் சரோபியை கைது செய்த போலீசார் நேற்று இரவோடு இரவாக இரணியல் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில்,

பாத்திமாவை தக்கலை பெண்கள் சிறையிலும் அவரது கணவர் சரோபியை நாகர்கோவில் கிளை சிறையிலும் அடைத்தனர்.

ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட் சிறுவன் ஜோகன் ரிஷியின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளது.