விழுப்புரம்..

விழுப்புரம் மாவட்டத்தை அடுத்துள்ள செஞ்சி கெடார் பகுதியில் உள்ள வீரமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி அஞ்சலை. 80 வயதான இவரது கணவர் சடையன் என்பவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அஞ்சலை கடந்த சில ஆண்டுகளாக வீரமூர் கிராமத்தில் உள்ள தனது மூத்த மகள் வீரம்மாள் என்பவரின் வீட்டில் வசித்து வருகிறார்.

வயது முதிர்வு காரணமாக அஞ்சலையால் எங்கும் தனியாக நடக்க முடியாது. இதனால் அன்றாட வாழ்க்கையை நடத்தவே அவருக்கு யாருடைய உதவியாவது தேவை என்ற சூழலே இருந்தது.
இதற்கிடையே நேற்று மாலை அஞ்சலையின் உறவினரான வெள்ளிச்சி என்பவர் உயிரிழந்துள்ளார். இதனால் மூதாட்டியின் மகள் உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் துக்க நிகழ்விற்குச் சென்றுள்ளனர்.

இதனால் மூதாட்டி அஞ்சலை மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரால் எங்கும் தனியாக நடக்க முடியாது என்பதால் படுத்துக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது எதிர் வீட்டில் வசிக்கும் குகன்(21) என்பவர் அங்கே வந்துள்ளார். குகன் அப்போது நல்ல குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து தனியாக இருந்த மூதாட்டி அஞ்சலையை அந்த கொடூரன் தூக்கிச் சென்றுள்ளான்.

வயது முதிர்ந்த அந்த மூதாட்டியால் அவனிடம் இருந்து தப்பிச் செல்ல முடியவில்லை. வீட்டில் இருந்த அனைவரும் துக்க வீட்டிற்குச் சென்றதால், மூதாட்டி கத்திய போதிலும் அவருக்கு உதவ யாருமே வரவில்லை.
அந்த மூதாட்டியை வீட்டின் அருகில் இருந்த அங்கன்வாடி மையத்திற்குத் தூக்கிச் சென்ற அந்த கொடூரன், அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனால் அந்த மூதாட்டி கத்தி கூச்சலிட்டுள்ளார்.

மூதாட்டி திடீரென கத்தியதால் பதறிய அக்கம்பக்கத்தினர், சத்தம் வந்த அங்கன்வாடி மையத்திற்கு வந்துள்ளனர். இதனால் பயந்து போன இளைஞர் குகன் உள்ளாடை மட்டும் எடுத்து அணிந்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து மூதாட்டியின் மூத்த மகள் வீரம்மாள் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். குற்றஞ்சாட்டப்பட்ட குகன் மீது வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார், அவனைக் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து போலீசார் அடுத்தக்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் 80 வயதான மூதாட்டியைக் குடிபோதையில் இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















