94 வயதில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற மூதாட்டி : உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் அசத்தல்!!

405

பகவானி தேவி தாகர்..

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்தில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடந்துவருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 94 வயதான பகவானி தேவி தாகர், தங்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பகவானி தேவி 24.74 வினாடிகளில் கடந்த தங்கப் பதக்கம் வென்றார். மேலும் குண்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

பகவானி தேவி இதற்கு முன்னரே, சென்னையில் நடைபெற்ற மூத்தோர் தடகள தொடரில், 3 தங்க பதக்கங்களை வென்றிருந்தார்.


அதேபோல அதற்கு முன் டெல்லியில் நடைபெற்ற தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகியவற்றில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்.

பின்லாந்தில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் ஒலிம்பிக்குக்கு இணையாக பார்க்கப்படுகிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஒலிம்பிக் போட்டிகளை விட அதிக வீரர்கள் இந்த தொடரில் கலந்து கொள்கிறார்கள்.

சர்வதேச பாரா தடகள வீரரும், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவருமான விகாஸ் தாகர், பகவானி தேவியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.