பொலிஸ் அதிகாரி…..

தமிழகத்தில் சாலையில் கிடந்த ஜல்லிக்கற்களை காவல் உதவி ஆய்வாளர் துடைப்பத்தால் சுத்தம் செய்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
சேலம் மாநகரில் உள்ள எருமாபாளையம் வழியே செல்லும் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னை, கள்ளக்குறிச்சியில் இருந்து வரும் பேருந்துகள் சேலம், கோவை மற்றும் பெங்களூருவுக்கு இந்தச் சாலை வழியாக சென்று வருகின்றன.

மேலும், ஏராளமான லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களும் சென்று இப்பகுதியில் சென்றுவரும் நிலையில், கட்டுமானப் பணிக்காக ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற லாரியிலிருந்து கற்கள் கொஞ்சம் சரிந்து சாலையில் விழுந்துள்ளது.
இதனால் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டு, வாகனங்கள் வேகமாகச் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதித்தது.

இந்நிலையில், நேற்று இரவு அவ்வழியே சென்ற கிச்சிப்பாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் முனவர் ஷெரீஃப் இதைப் பார்த்துவிட்டு, காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சம்பந்தப்பட்டவர்கள் வந்து கற்களை அகற்றுவதற்குள் விபத்து ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் முனவர் ஷெரீஃப் சிதறிக்கிடந்த ஜல்லி கற்களை, தானே அப்புறப்படுத்தியதோடு, துடைப்பத்தால் சாலையையும் பெருக்கி சுத்தப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் இந்த வழியே வாகனங்கள் இயல்பாகச் செல்ல தொடங்கியுள்ளது. காவல் உதவி ஆய்வாளரின் இந்த மனிதாபிமானச் செயலை அறிந்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார், அவரை அழைத்து பாராட்டினார்.















