குடிக்க விடாமல் தடுத்த 12வது மனைவி… போதை ஆசாமி செய்த கொடூரம்!!

546

மனைவியை..

குடிப்பழக்கத்திற்கு அடிமையான 50 வயதான ஒருவர், தான் மது அருந்துவதைத் தடுக்க முயன்ற தன் மனைவியைக் கொலை செய்துள்ளார். திங்கள்கிழமை ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதியில் உள்ள தாராபூர் கிராமத்தில் தம்பதிகள் தனியாக இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

50 வயதாகும் ராம் சந்திர துரி 12 முறை திருமணம் செய்துகொண்டவர். ஏற்கெனவே அவரைத் திருமணம் செய்துகொண்ட 11 மனைவிகள் அவரது குடிப்பழக்கம் மற்றும் அடிக்கடி சண்டையிடும் போக்கு காரணமாக அவரை விட்டுப் பிரிந்துவிட்டனர்.

பின்னர், 12வது மனைவியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு சாவித்ரி தேவி (40) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். மூத்த மகன் ராஜ்குமார் ஐதராபாத்தில் கூலி வேலை செய்கிறார்.


சம்பவத்தன்று மூன்று குழந்தைகளும் கிராமத்தில் நடக்கும் ஒரு திருமணத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தனர். இதனால் சாவித்திரியும் தூரியும் தனியாக இருந்துள்ளனர். இந்நிலையில், இரவு நேரத்தில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த துரி மீண்டும் மது அருந்தத் தொடங்கினார்.

அப்போது அவர் மேலும் மது அருந்த விடாமல் சாவித்திரி தடுத்திருக்கிறார். இதனால் கோபம் அடைந்த தூரி மரத்தடியால் சாவித்திரியை அடிக்க ஆரம்பித்துவிட்டார். உடனே சாவித்திரி மயக்கமடைந்து கீழே விழுந்திருக்கிறார். ஆனால் தூரி விடாமல் திரும்பத் திரும்ப அடித்துக்கொண்டே இருந்ததில் சாவித்திரி உயிரிழந்துவிட்டார்.

மூன்று குழந்தைகளும் கல்யாண வீட்டில் இருந்து இரவு வீடு திரும்பியபோது, தாயார் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு கூச்சல் போட்டனர். அவர்களின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் சாவித்திரி கொல்லப்பட்டது பற்றி காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதுபற்றி தாராபூர் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் வினய் குமார் சாவ் கூறுகையில், “தூரிக்கு இதற்கு முன் 11 திருமணங்கள் நடந்துள்ளன. ஒவ்வொரு முறையும் மனைவியை அடித்து துன்புறுத்தினார். இதனால் அவர்கள் அவரை விட்டு பிரிந்து செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குடிப்பழக்கத்திற்கு 12வது மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் அவரை கொன்றுவிட்டார்” என்றார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிராம மக்கள் சொல்வதுபோல் தூரிக்கு இதற்கு முன்பு 11 திருமணங்கள் நடந்திருக்கின்றவா என்பதை போலீசாரால் உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.