தமிழகத்தில்….

தமிழகத்தில் வயதான தம்பதியினரிடத்தில் இருந்து சொத்தை பறித்து கொண்டு வீட்டை விட்டு பிள்ளைகளே வெளியேற்றி விட்டதால் ஆதரவற்ற நிலையில் அவர்கள் தெரு தெருவாக சுற்றி வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூரையடுத்த கோட்டங்கள்ளூர் பகுதியைச் சேர்ந்த முனியன் – ரஞ்சிதம் தம்பதிக்கு 2 மகன்களும் 2 மகள்கள் உள்ளனர்.

அனைவருக்கும் திருமணமாகி விட்ட நிலையில், தங்களுக்கு சொந்தமான 70 சென்ட் நிலத்தை பிள்ளைகளுக்கு பிரித்து எழுதியும் கொடுத்து விட்டு ஒரு சிறிய வீட்டில் வசிக்கத் தொடங்கினர். வயதான காலத்தில் தங்களுக்காக அவர்கள் எந்த பிடிமானமும் வைத்துக் கொள்ளவில்லை.
சொத்தை வாங்கிய பிறகுதான் மகன்களின் உண்மை முகம் தெரிய வந்தது. மூத்த மகன் ரத்தினவேல் அடித்து உதைத்து துன்புறுத்திய காரணத்தினால், தம்பதியினர் வீட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பல்வேறு இடங்களில் சென்று தங்கி வந்த நிலையில், கொரோனா பரவல் வேறு முதியவர்களை அச்சுறுத்தியது.

இதையடுத்து, முனியன் தம்பதி மீண்டும் கோட்டங்கள்ளூர் திரும்பி தங்களுக்கு சொந்தமான வீட்டில் தங்கியுள்ளனர். இதையடுத்து , அங்கே வந்த மூத்த மகன் ரத்திகவேல் மீண்டும் பெற்றோரை அடித்து வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.
வேறு வழியில்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய வயதான அந்த தம்பதி ஓமலூர் காவல் துணை கண்காணிப்பாளரிடம் தங்களுடைய வீட்டை மகனிடமிருந்து மீட்டு தரும்படியும்,

தங்கள் உயிரை காப்பாற்ற வேண்டியும் கண்ணீர் மல்க புகார் அளித்தனர். இதையடுத்து, டிஎஸ்பி உடனடியாக விசாரணை செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.















