கணவனை மாமனாருடன் சேர்ந்து வெட்டி படுகொலை செய்த மனைவி : அதிர்ச்சி சம்பவம்!!

1118

திருப்பத்தூர்….

திருப்பத்தூர் அருகே தனது கணவனை மாமனாருடன் சேர்ந்து மனைவி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சசிகுமார் (45). இவரது மனைவி லட்சுமி (40). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு ஆளான சசிகுமார் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு அடித்து உதைத்துள்ளார்.

வழக்கம் போல நேற்று முன்தினம் இரவும் சசிகுமார் குடிபோதையில் வந்து மனைவியை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். அப்போது, அங்கு வந்த சசிகுமாரின் தந்தை சுப்பிரமணி (70) தட்டிக்கேட்டுள்ளார்.


இதனால், ஆத்திரமடைந்த சசிகுமார், மனைவியையும் தந்தையையும் சரமாரியாக தாக்கியுள்ளார். வலி தாங்க முடியாததால் தந்தை சுப்பிரமணி, மனைவி லட்சுமி ஆகியோர் சேர்ந்து சசிகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சசிகுமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சசிகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, தந்தை மற்றும் மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.