கணவன், மனைவி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

519

தமிழகத்தில்…

கோவை மாவட்டம் வடவள்ளி வேம்பு அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் தனது தாய் பிரேமா, மனைவி லக்ஷயா மற்றும் மகள் யக்ஷிதாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். ராஜேஷ் கடன் பிரச்சனையால் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரது வீட்டில் துர்நாற்றம் வீசியதை அக்கம்பக்கத்தினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ராஜேஷின் வீட்டிற்கு விரைந்த பொலிஸார், கதவை உடைத்து பார்த்தபோது ராஜேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்துள்ளார்.

மேலும் அவரது தாய், மனைவி மற்றும் மகள் ஆகிய மூவரும் சடலமாக கிடந்துள்ளனர். அவர்கள் விஷம் குடித்தது பின்னர் தெரிய வந்தது. பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், ராஜேஷின் குடும்பம் தற்கொலை செய்து இறந்து 2 நாட்கள் இருக்கலாம் என்றும், கடன்தொல்லையால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் தெரிய வந்தது.


அதனைத் தொடர்ந்து அவர்களின் உடல்களை மீட்ட பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடவள்ளி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து இறந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.