கத்தியால் குத்திய தந்தை : சுருண்டு விழுந்த ‘போதை‘ மகன்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சி.!!

560

சேலம்………….

குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் வெளியாக சிசிடிவி காட்சி பதை பதைக்க வைத்துள்ளது.

சேலம் அருகே நாழிக்கல்பட்டியில் உள்ள வடமாத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ஜெகன்(வயது 24) வெள்ளி பட்டறை தொழில் செய்து வருகிறார்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஜெகன் தினமும் மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டு வருவார் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த ஒன்றாம் தேதி காலை ரத்தவெள்ளத்தில் ஜெகனை தூக்கிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் பெயின்ட் அடிக்கும் போது தவறி கீழே விழுந்து விட்டதாகவும் அப்போது அவரது உடலில் கம்பி குத்தி விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெகன் நேற்று காலை உயிரிழந்தார்.


ஆனால் அவரது வயிற்றில் இருந்த காயம் கம்பியால் ஏற்பட்டது அல்ல கத்தியால் குத்தப்பட்டது என்று மருத்துவர்கள் போலீசிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உள்ளூர் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, கத்தியால் மகனை தந்தையே குத்தும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அங்குள்ள ரோட்டோர கடை அருகில் தந்தை சேகர் நின்று கொண்டிருந்த போது அவரது மகன் வந்து பேசுகிறார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென கடையில் இருந்த கத்தியை எடுத்து ஜெகனை சரமாரியாக அவரது தந்தையே குத்துகிறார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து சேகரை பிடித்து தடுத்து நிறுத்துகின்றனர். இதில் படுகாயமடைந்த ஜெகன் அதே இடத்தில் சுருண்டு விழுகிறார். இந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு, போலீசார் தந்தை சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.