கேரள மாநிலத்தில்..

கேரள மாநிலம் வைக்கம் அடுத்த அரட்டுகுளங்கரையை சேர்ந்தவர் சுரஜா நாயர். 45 வயதான இவர் ஒடிசாவில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று அங்கிருந்து ஆலப்புழை-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக கேரளா சென்று கொண்டிருந்தார்.

இதனிடையே கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சுரஜா அவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை என்று கூறப்படுகிறது. தமிழகத்தின் ஜோலார்பேட்டையில் ரயில் நின்ற நிலையில் கழிவறையில் உயிரிழந்த நிலையில் சுரஜா கிடந்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக ரயில்வே போலீஸ் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஜோலார்பேட்டை பிரேத பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் வைக்கத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு புறப்பட்டு வந்துகொண்டிருக்கிறார்கள். சமூக சேவைகளில் தீவிர நாட்டுமுடைய சுரஜா பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வந்தார்.

இவரது தந்தை பாலக்காடு மடத்தைச் சேர்ந்த மறைந்த சுரேந்திரன் நாயர் ஆவார். சுரஜாவின் கணவர் ஜீவன் வெளிநாட்டில் தற்போது பணிபுரிந்து வருகிறார். தகவலறிந்த அவர் கேரளா வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதுதொடர்பாக ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஓடும் ரயிலில் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















