
நாமக்கல் மாவட்டத்தில் திருமண ஆசைக்காட்டி அடுத்தடுத்து 11 ஆண்களை நம்ப வைத்து, அவர்களிடம் இருந்து நகைகளையும், பணத்தையும் மோசடி செய்த இளம்பெண்ணைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இவரிடம் பல ஆண்கள் சபலத்தில் நகைகளையும், பணத்தையும் பறிகொடுத்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வடகரையாத்தூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சிவசண்முகத்திற்கு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான நிலையில், மகனின் இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேடி வந்தார்.
அப்போது சிவசண்முகத்திற்கு திருமல் கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஓலப்பாளையம் முடிக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் புரோக்கரான தமிழ்ச்செல்வி (45) என்பவர் அறிமுகமானார்.
தமிழ்ச்செல்வி மூலமாக மதுரையை சேர்ந்த பெண் புரோக்கர்கள் சங்கர், வேல்முருகன், முத்துலட்சுமி, கஸ்தூரி, பாண்டி ஆகியோர் அறிமுகமானார்கள்.
அப்போது அவர்கள் 2வது திருமணத்திற்கு பெண் பார்த்து தருவதற்கு ரூ.4 லட்சம் புரோக்கர் கமிஷனாக பேசியுள்ளனர். அதன்படி சிவசண்முகம் அவர்களுக்கு முதல் தவணையாக ரூ.1.20 லட்சம் கொடுத்திருக்கிறார்.
அவரிடம் பணத்தை பெற்றுக் கொண்ட புரோக்கர்கள் விருதுநகர் மாவட்டம் ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகள் தீபா (24) என்பவரை காட்டி 2வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
இதனையடுத்து கடந்த ஜூலை 7ம் தேதி சிவசண்முகம், தீபா திருமணத்தை மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள கோவிலில் நடத்தி வைத்தனர். பின்னர் சிவசண்முகம் மனைவியுடன் சொந்த ஊரான வடகரையாத்தூருக்கு சென்றார்.
அடுத்த நாள் ஜூலை 8ம் தேதி சிவசண்முகம், தீபா ஆகியோர் அங்கேயே இரவு தங்கினர். மறுநாள் 9ம் தேதி அதிகாலை சிவசண்முகத்தின் புது மனைவி தீபா, வீட்டில் இருந்த தங்க நகைகளை, வெள்ளி பாத்திரங்கள், கொலுசு, பட்டுப்புடவை உள்ளிட்ட பொருட்களுடன் வீட்டிலிருந்து மாயமானார்.
இதனையடுத்து சிவசண்முகம் தீபாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதே சமயம் அனைத்து புரோக்கர்களின் செல்போன்களும் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்தவர், சிவசண்முகம் தாம் ஏமாற்றுப்பட்தை அறிந்து, விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து நல்லூர் காவல் நிலையத்தில் சிவசண்முகத்தின் உறவினர் புகாரளித்தனர்.
இந்த புகாரின் பேரில் வேலகவுண்டம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிவசண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் திருமணம் செய்துவிட்டு ஏமாற்றி சென்ற பெண் மற்றும் புரோக்கர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசாரின் விசாரணையில் தொடர்புடைய இளம்பெண் தீபா மற்றும் புரோக்கர்களை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார், திருமணம் செய்துக் கொண்டு நகைகளுடன் தப்பிய தீபா மற்றும் புரோக்கர்கள் தமிழ்ச்செல்வி (45) திருச்சியை சேர்ந்த நாராயணன் என்கிற சங்கர் (54) தூத்துக்குடி புதூர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (55) திருப்புவனம்
அருகே கீழடியை சேந்த திருத்தணி என்பவரது மனைவி முத்துலட்சுமி (45) சிவகாசியை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மனைவி கஸ்தூரி பாண்டி (38) ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சிவசண்முகத்தை ஏமாற்றி திருமணம் செய்த தீபாவின் உண்மையான பெயர் ஜோதி மணி.
மதுரையைச் சேர்ந்த இவர் சிவசண்முகத்தை திருமணம் செய்து 3 நாட்கள் மனைவியாக நடிப்பதற்காக புரோக்கர்களிடம் ரு.30,000 பேரம் பேசி திருமணம் செய்துள்ளார். அதன்படி ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்துள்ளார்.
இப்படி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 11க்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசைக்காட்டி அவர்களிடம் இருந்து நகைகளையும், பணத்தையும் பறித்து மோசடி செய்தது தெரிய வந்தது.
இவரின் ஆசைவார்த்தைக்கு மயங்கிய பல ஆண்கள் சபலத்தில் நகைகளையும், பணத்தை இழந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிமணி மற்றும் புரோக்கர்கள் 6 பேரையும் போலீசார் மரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.















