
தமிழகத்தில் சமீப வருடங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி கர்ப்பமாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த 15 வயதுடைய 10ம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவர், கருங்கல் அருகே உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
இவருடைய தந்தை ஏற்கெனவே இறந்து விட்டார். தற்போது காலாண்டு விடுமுறை என்பதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி தனது தாயாரை பார்ப்பதற்காக நாகர்கோவிலுக்கு வந்துள்ளார்.
சம்பவத்தன்று மாணவி தனக்கு வயிறு வலிப்பதாக தாயாரிடம் கூறினார். இதையடுத்து தாயார், மாணவியை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்து சென்றார்.
அங்கு மாணவியை பரிசோதனை செய்த போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், இது குறித்து குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். ஆனால் மாணவி பதில் எதுவும் கூறாமல் மெளனமாகவே இருந்தார்.
இதையடுத்து மாணவியை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
கருங்கல் பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் மாணவி தங்கி இருந்ததால் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரணமான நபர் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.















