
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் காதல் திருமணத்தை பதிவு செய்ய வந்த ஜோடியின் உறவினர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் இசக்கிபாண்டியன் சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள கோவிலில் தனது காதலியுடன் திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவரும் தங்கள் உயிர் பாதுகாப்பு கோரிக்கையுடன் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
இதையடுத்து திருமணத்தை பதிவு செய்வதற்காக பாளையங்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு இருவரும் வந்தனர். அப்போது, இரு குடும்பத்தினரும் அங்கு வந்தனர். இது தொடர்பாக ஆரம்பத்தில் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி, இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் மூவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவத்தால் பத்திரப்பதிவு அலுவலகம் சிலநேரம் பரபரப்பாக மாறியது.
போலீசார் உடனடியாக அங்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து, இரு தரப்பினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.















