அடுத்தடுத்து தீக்குளிக்க முயற்சித்த பெண்கள் : வெளியான அதிர்ச்சி காரணம்!!

576

கிருஷ்ணகிரி..

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது அகரம் கிராமத்தை சேர்ந்த மகேஷ்வரி என்ற பெண் தனது மகள் சந்தியாவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென தான் மறைத்து வைத்து இருந்த மண்ணென்னையை எடுத்து உடலில் ஊற்றி கொள்ள முயற்சி செய்தார்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரிக்கையில் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்தவர் என தெரிவித்தார்.

மேலும், தனது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்ட நிலையில் சிரமப்பட்டு தனது இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளதாகவும் தற்போது மூன்றாவது மகள் சந்தியாவுடன் வசித்து வருவதாகவும் இந்த சூழலில் தனது மகளை வேலைக்கு செல்லவிடாமல் அருகில் இருப்பவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி இடையூறு செய்வதாக புகார் தெரிவித்தார்.


மேலும், இது குறித்து நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தீ குளிக்க முயற்சி செய்ததாக தெரிவித்தார். இதனை அடுத்து போலீசார் இவர்களை நாகரசம்பட்டி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானூர் பகுதியை சேர்ந்த தீபா என்ற பெண் வரதட்சணை கேட்டு கொடுமை செய்யும் மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தீ குளிக்க முயற்சி செய்தார்.

இதனை அடுத்து அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரிக்கையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பாளேதோட்டம் அடுத்த முங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் தனது கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் வரதட்சணை கேட்டு மாமியார்,

மாமனார் மற்றும் மைத்துனர் கொடுமை செய்வதாகவும், இருவரையும் பிரித்து வைத்து விட்டு தனது கணவருக்கு வேறு திருமணம் செய்து வைத்து விட்டதால் தனது இரண்டு குழந்தைகளுடன் சிரமப்பட்டு வருவதால் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனது 6 சவரன் தங்க நகையை மீட்டு தர வேண்டும் என தீ குளிக்க முயற்சி செய்தார்.