கேரளா..

கேரள மாநிலம் கோழிக்கோடு கோடஞ்சேரி பகுதியை சார்ந்தவர் 52 வயதான மதபோதகர் ஷிஜு கே. ஜோஸ். இவருக்கும் திருச்சூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. மதபோதகர் ஷிஜுவின் மனைவி அமெரிக்காவில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

ஷிஜு கோழிக்கோடு பகுதியில் உள்ள பிரபலமான மத அமைப்பு ஒன்றின் போதகராக இவர் பணிபுரிந்து வருகிறார். அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்காக பிரார்த்தனை செய்வது அவர்களுக்காக கடவுளிடம் மன்றாடுவது போன்ற சித்து வேலைகளை செய்து வந்துள்ளார். இவர் நேபாளிலும் சென்று பிரார்த்தனை ஊழியம் செய்து வந்துள்ளார்.

இதைத் தவிர இவர் தனது முகநூல் மற்றும் யூடியூப் பக்கங்களில் பிரார்த்தனை செய்வதை வீடியோவாக பதிவு செய்து பதிவேற்றுவது மற்றும் ஆன்லைன் பிரார்த்தனை செய்வது போன்ற பணிகளையும் செய்து வந்துள்ளார்.

இதனிடையே முகநூல் ஆன்லைன் பிரார்த்தனை பக்கம் வழியாக மதபோதகருக்கும் ,காயங்குளம் பகுதியை சார்ந்த 30 வயதுடைய பிரியங்கா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளகாதலாக மலர்ந்துள்ளது.

இந்த கள்ளக்காதல் நாளடைவில் நேரில் பார்த்துக் கொள்வது , விடுதிகளில் தனிமையில் இருப்பது போன்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.இதற்காக மதபோதகர் அவ்வப்போது மனைவிக்கு தெரியாமல் கூட்டு சேமிப்பு வங்கி கணக்கில் இருந்து பெருந்தொகையை எடுத்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இது மனைவிக்கு தெரியவரவே மனைவிக்கும் மதபோதகருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் கள்ளக் காதலியுடன் தனிமையில் இருக்கும் போது போதையில் இருந்த மதபோதகர் தனக்கும் மனைவிக்கும் சொந்தமான கூட்டு வங்கி கணக்கில் இருந்து 1 கோடி 20 லட்சம் ரூபாயை கள்ளக் காதலியான பிரியங்காவின் வங்கி கணக்கில் அனுப்பியுள்ளார்

. இதைத் தெரிந்து கொண்ட மனைவி மதபோதகரிடம் இவ்வளவு பெரிய தொகையை எதற்காக எடுத்தீர்கள் என்று கேட்டபோது புண்ணிய காரியங்கள் செய்வதற்காக எடுத்ததாக பொய்யை அள்ளி விட்டுள்ளார்.இதில் சந்தேகம் அடைந்த மனைவி அமெரிக்காவில் இருந்து கொண்டே ஊரில் உள்ள உறவினர்களிடம் மதபோதகரை குறித்து விசாரித்துள்ளார்.

இதில் மதபோதகருக்கும் , பிரியங்காவுக்கு மிடையே கள்ளத்தொடர்பு இருப்பது தெரிய வந்தது. உடனே அமெரிக்காவில் இருந்து இந்தியா பறந்த மதபோதகரின் மனைவி, தனக்கு தெரியாமல் இருவருக்கும் சொந்தமான கூட்டு சேமிப்பு கணக்கிலிருந்து 1 கோடி 20 லட்சம் ரூபாயை கணவர் கையாடல் செய்ததாக ஆலப்புழா காவல் ஆணையரிடம் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து வங்கி கணக்குகளை வைத்து விசாரணை மேற்கொண்ட கேரளா போலீசார் கையாடல் செய்யப்பட்ட பெருந்தொகை கள்ளக்காதலியின் வங்கி கணக்கில் இருப்பதாக கண்டுபிடித்தனர்.

மாட்டிக் கொள்வோம் என தெரிந்து கொண்ட மதபோதகர் கள்ளக்காதலியுடன் தலைமறைவாகி நேபாளம் சென்றுள்ளார். பின்பு டெல்லி வழியாக வெளிநாட்டிற்கு தப்பி செல்லலாம் என திட்டம் தீட்டியுள்ளார். இந்தத் திட்டத்தை தெரிந்துகொண்ட கேரளா போலீசார் இவர்களது புகைப்படங்களை விமான நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

வெளிநாடு செல்வதற்காக டெல்லி வந்தபோது விமான நிலைய அதிகாரிகள் இரு நாட்கள் முன்பு இவர்களை கைது செய்தனர். பின்பு இருவரையும் கேரளா போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து காயங்குளம் போலீசார் இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















