
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து நடிகையும் சுஷாந்தின் காதலியுமான ரியாவும், அவரது குடும்பத்தினரும் சுஷாந்திடம் மோசடி செய்ததாக அவரது தந்தை கே.கே.சிங், பாட்னா காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ரியா மீது பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், தன் மீது பாட்னாவில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை, மும்பைக்கு மாற்றக் கோரி ரியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே சுஷாந்த் மரண வழக்கைப் பீகார் மாநில அரசு சிபிஐயிடம் ஒப்படைத்துள்ள நிலையில், சிபிஐ விசாரணையைத் தொடர்வது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

அதில், சு ஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, வழக்கு தொடர்பாக மும்பை காவல்துறை இதுவரை சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் வழக்கு விசாரணை அடுத்த கட்டத்திற்குச் செல்கிறது.















