ஆந்திர மாநிலம்…

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் பிளான்ட் சாலையில், 19 வயது பள்ளி மாணவியும், 22 வயதான அஜய் குமார் என்பவரும் பைக்கில் சென்றுள்ளனர். இவர்கள் பைக்கில் சென்ற விதம், காவல்துறை வரை பிரச்னையைக் கொண்டு சென்றுள்ளது. பைக்கில் அந்த நபர் ஓட்ட, பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்திருந்த மாணவி, அவரை கட்டிப்பிடித்தபடி பயணித்துள்ளார்.

இருவரும் ரொமான்ஸ் செய்துகொண்டே சிறிது தூரம் வரை வேகமாகச் செல்ல, சாலையில் பயணித்தவர்களின் கவனம் இவர்கள் மேல் விழுந்துள்ளது. அப்போது, அந்த வழியாக காரில் சென்ற ஒருவர் காதல் ஜோடியின் அந்த பைக் பயண காட்சியை தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார்.

அந்த காட்சி வைரலானதை அடுத்து விசாகப்பட்டினம் போலீசார் அந்த காதல் ஜோடியை தேடினர். பைக் பதிவு எண்ணை வைத்து விசாரித்ததில் அந்த வாலிபர் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த வாலிபர் என்பதும், அவருடன் சென்றவர் 10-ம் வகுப்பு மாணவி என்பதும் தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் 336, 279, 132, 129 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த மாணவி மற்றும் நபரின் பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.

அந்த மாணவியிடம் படிக்கும் வயதில் கல்வி மீது மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், காதல் வயப்படுவது தவறு என கூறினர். மேலும் அந்த வாலிபரை தனியாக அழைத்து போலீசார் தங்கள் பாணியில் ‘கவனித்து’ அனுப்பி வைத்தனர்.

இது குறித்து விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் சி.ஹெச்.ஸ்ரீகாந்த் கூறுகையில், “குடிமகன்களும் அவர்களின் குடும்பங்களும் சாலை விதிகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்















