தினமும் குடித்துவிட்டு துன்புறுத்திய கணவன்.. நள்ளிரவில் மனைவி செய்த சம்பவம்!!

643

திருவள்ளூரில்..

திருவள்ளூர் மாவட்டம் வெங்கம் அருகே உள்ள வாணியன் சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 30). கூலித் தொழிலாளியான இவருக்கு தங்கலட்சுமி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளன.

ரமேஷ் கடந்த வாரம் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கான திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரமேஷ் உயிரிழப்பை சந்தேகம் மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில், ரமேஷ் மூச்சு திணறி உயிரிழந்திருப்பதும்,

பலவந்தப்படுத்தப் பட்டிருப்பதற்கான தடயங்களும் இருந்தது தெரியவந்தது. வீட்டில் அவருடைய மனைவி தங்கலட்சுமி மட்டுமே இருந்த நிலையில், அவர் மீது போலீசார் தங்களது சந்தேகப் பார்வையை திருப்பினர்.


தங்க லட்சுமியை தங்களது கஸ்டடியில் கொண்டு வந்து துருவித் துருவி விசாரித்தனர். விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் காவல் துறையினரையே அதிர வைத்தது.

கணவர் ரமேஷ் வேலைக்கே செல்லாமல் தினந்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதனால் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த அன்றும் வேலைக்கு செல்லாமல் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார் ரமேஷ். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட, மனைவியை கடுமையாக தாக்கிவிட்டு வீட்டில் படுத்து உறங்கிவிட்டார்.

தன்னை தினமும் அடித்து துன்புறுத்தும் கணவர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த தங்கலட்சுமி, அவர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தபோது தலையணையை வைத்து அமுக்கி மூச்சு திணறச் செய்து கொலை செய்துள்ளார்.

தங்கலட்சுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து திருவள்ளூர் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தினர்.

நீதிபதியின் உத்தரவின் பேரில் தங்கலட்சுமி புழல் பெண்கள் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் கொலை செய்யப்பட, மனைவி சிறைக்கு சென்றுவிட்டார்.

இதனால் நிராதரவாகியுள்ள அவர்களின் 2 குழந்தைகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. கணவன் – மனைவி இருவரும் மனதுவிட்டு பேசினாலே அனைத்து பிரச்னைகளும் சரியாகிவிடும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.