IIT மாணவர் தற்கொலை : கடந்த 3 மாதத்தில் 4 மாணவர்கள் தற்கொலை : போலிஸ் தீவிர விசாரணை!

323

IIT மாணவர்..

இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி கல்வி நிலையங்களில் சாதிய பாகுபாடுகள் காரணமாக 72% பட்டியலின மாணவர்கள் ஐ.ஐ.டியில் இருந்து தங்களின் உயர் கல்வி படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறியுள்ளனர். அதேபோல், சென்னை உள்ளிட்ட ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் கல்வி நிலையங்களில், தொடர்ச்சியாக மாணவர்கள் மர்மமான முறையில் தற்கொலை கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இதைத் தடுப்பதற்கு ஒன்றிய கல்வித்துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவருவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் சங்கங்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் சென்னை ஐஐடியில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் தற்போது மற்றொரு மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷோக்லே கேதார் சுரேஷ். இவர் சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஐஐடி விடுதியில் தங்கி பி.டெக் கெமிக்கல் இஞ்சினியரிங்க் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று மாணவர் கேதார் சுரேஷ் தான் தங்கியிருந்த காவேரி ஹாஸ்டல் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடன் தங்கியிருந்த மாணவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலிஸார் உயிரிழந்த மாணவன் உடலை கைபற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியதில் மாணவன் சில நாட்களாக மன உளைச்சில் இருந்து வந்தது தெரியவந்தது. இது குறித்து போலிஸார் மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று மாதத்தில் மட்டும் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்மையில் ஐ.ஐ.டி மாணவர்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.