INSTA TRADING பண மோசடி.. கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!!

226

சென்னையில்..

இன்ஸ்டா விளம்பரங்களை நம்பி ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.30,000 இழந்த சென்னை கல்லூரி மாணவி மகாலட்சுமி கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை 7 கிணறு போர்ச்சுகீஸ் சர்ச் தெரு பகுதியில் வசித்து வருபவர் சாந்தி. இவர் கணவரைப் பிரிந்து ஜோசப் என்பருடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மகாலட்சுமி அண்ணா அதர்ஸ் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இரண்டாவது மகள் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் ஆவார்.

இந்த சூழலில் சாந்தி கடந்த 15 வருடமாக amway products விற்பனை செய்து வந்துள்ளார். ஆனால் அதில் நஷ்டம் அடைந்த காரணத்தினால் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இதனால் தாய்க்கு உதவ நினைத்துள்ளார் மகாலட்சுமி. அந்த சமயத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்த விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார்.


அதனை நம்பிய இவர், ஆன்லைன் டிரேடிங் செய்வதற்காக முயற்சி செய்துள்ளார். அது மோசடி இணையதளம் என்று தெரியாமல் ஆன்லைன் டிரேடிங்கில் சுமார் 30 ஆயிரம் ரூபாய் தாயின் பணத்தை முதலீடு செய்து சம்பாதிக்கலாம் என நினைத்துள்ளார். ஆனால் அதில் போட்ட பணம் திரும்பக் கிடைக்காததால் மாணவி மகாலட்சுமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பணத்தை இப்படி நம்பி ஏமாந்து விட்டோமே, தாய்க்கு என்ன கூறுவது என்று யோசித்து யோசித்து மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று இரவு முழுவதும் பணத்தை இழந்த அதிர்ச்சியில் தூங்காமல் இருந்த கல்லூரி மாணவியை பெற்றோர்கள் தூங்கச் சொல்லி உள்ளனர்.

ஆனால் மன உளைச்சலில் இருந்து வந்த மாணவி, கடந்த மாதம் வீட்டின் நடுப்புறம் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அவரது மொபைல் போனையும் சோதனை செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மாணவி தற்கொலை விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டபோது, அமானுல்லா கான், முகமது ஆசிப் இக்பால், முகமது பைசல் ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.