இளம்பெண் ஆணவக் கொலை : காதலி இறந்ததால் மனமுடைந்த காதலன் ரயிலில் பாய்ந்து தற்கொலை!!

767

கர்நாடகா..

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்காருபேட் தாலுகாவில் உள்ள போடகுர்கி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. இவரது மகள் கீர்த்தி. கல்லூரியில் படித்து வந்தார்.

மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த கங்காதர் என்ற இளைஞரை அவர் சில வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார். மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த நபரைக் காதலிப்பதால் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காதல் விவகாரம் தொடர்பாக மகளுக்கும் தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ‘நான் அவரை தான் காதலிப்பேன்’ என உறுதியுடன் மகள் தெரிவித்துள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த தந்தை பெற்ற மகள் என்றும் பார்க்காமல் அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் மகள் தற்கொலை செய்து கொண்டது போன்று நாடகமாடியுள்ளார்.

இதுபற்றி அறிந்த போலிஸார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், காதலி இறந்த செய்தியைக் கேள்விப்பட்ட உடனே காதலன் கங்காதர், துக்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தனது வீட்டு அருகே இருந்த ரயில் தண்டவாளத்திற்குச் சென்று ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.