மகாராஷ்டிரா…

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பரபரப்பான சாலையில் ஒரே பைக்கில் குழந்தைகள் உட்பட 7 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.இந்த புகைப்படங்கள் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மோட்டார் வாகன சீர்திருத்த சட்டப்படி சிறிய விதி மீறல்களுக்கு கூட கடுமையான அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகளில் இளைஞர்கள் பலர் பைக்கில் சாகசங்கள் செய்தபடி பயணிப்பது வாடிக்கையாகி வருகிறது. இந்த செயல் சக வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதுபோன்ற சாலைகளில் சாகசம் செய்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதித்தாலும் இத்தகைய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இரு சக்கர வாகனத்தில் 3 குழந்தைகள் மற்றும் 4 சிறுவர்கள் என மொத்தம் 7 பேரை ஏற்றிக் கொண்டு மும்பையின் பரபரப்பான சாலையில் சென்றது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த ஆபத்தான பயணத்தை முனவர் ஷா என்பவர் மேற்கொண்டு இருந்தார். 2 குழந்தைகள் முன்பக்கம் நின்ற படியும் 3 பேர் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டும், மேலும் இரு சிறுவர்கள் பின்பக்கம் உள்ள கம்பியில் நின்ற படியும் பயணம் செய்தனர்.

இதை சக வாகன ஓட்டிகள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். காவல்துறையினர் வாகனத்தின் எண்ணை வைத்து சம்பந்தப்பட்ட நபரை தேடி கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். அதன்படி பைக்கை ஓட்டிச் சென்றவர் முனவர் ஷா.

இப்போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்ற 7 பேரில் 4 குழந்தைகள் அவரது பிள்ளைகள் என்றும் மீதம் உள்ள 3 பேர் பக்கத்து வீட்டு பிள்ளைகள் எனவும் தெரிவித்துள்ளார்.















