ட்ரிப்பில் திருமணம், பாலியல் வன்கொடுமை.. மாணவன் மீது 35 வயது பேராசிரியை பகீர் புகார்.. நீதிமன்றம் வைத்த செக்!!

346

ஹரியானாவில்..

ஹரியானா மாநிலம் குர்கானிலுள்ள பல்கலைக் கழகத்தில் 35 வயதான பெண் பேராசிரியர் பணியாற்றி வருகிறார். அதே பல்கலைக் கழகத்தில் பயின்ற மாணவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தார்.

புகாரில், “கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாணவரை கல்லூரியில் சந்தித்தேன். அப்போது நான் பேராசிரியராக பணியாற்றி வந்தேன். அவர் பட்டப் படிப்பு படித்து வந்தார். கடந்த ஆண்டு மே மாதம் இருவரும் அதிகாரப்பூர்வ பயணமாக மணாலிக்கு சென்றோம். அங்குள்ள சிறிய கோயிலில் வைத்து மாணவர் என்னை திருமணம் செய்துகொண்டார். விரைவில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொள்கிறேன் என்றும் உறுதியளித்தார்.

அதன் விளைவாக இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் என இரண்டு முறை நான் கர்ப்பமடைந்தேன். ஆனால், அதன்பிறகு மாணவன் என்னை திருமணம் செய்துகொள்வதற்கு மறுத்துவிட்டான். நான் மாணவனின் குடும்பத்தினரை சந்தித்து முறையிட்டபோது, அவர்கள் கருவைக் கலைத்துவிடும்போது என்னை கட்டாயப்படுத்தினர்” என்று தெரிவித்திருந்தார்.


இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் புகாரின் பேரில் மாணவன் மீது பாலியல் வன்கொடுமை, கிரிமினல் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குர்கான் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க மாணவர் தரப்பில் இருந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, “35 வயதான பேராசிரியர் பி.ஹெச்டி முடித்துள்ளவர் என்பதால் நிச்சயம் உயர் கல்வி அறிவைக் கொண்டவர். அதன் அடிப்படையில் மதிப்புமிக்க பல்கலைக் கழகத்தில் பலம்வாய்ந்த பேராசிரியர் பணியில் இருப்பவர். ஆனால், ஜாமீன் கேட்டுள்ளவரோ அங்கு படிக்கும் மாணவர். இருவருக்கும் இடையிலானது குரு – சிஷ்யன் உறவு முறை.

20 வயது மாணவனுடன் டேட்டிங் செய்ய ஆரம்பித்த நேரத்தில் தான் ஏற்கனவே திருமணமானவர் என்பதையோ, மாணவனை விட தனக்கு வயது மிக அதிகம் என்பதையோ மறந்திருக்க முடியாது. மாணவர் போன்ற வயதில் சிறியவருடன் தொடர்பில் இருப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேராசிரியருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

மாணவனுடன் பேராசிரியர் உடலுறவில் ஈடுபட்டதோடு அதனை ஒரு வருடன் வரை தொடரவும் செய்திருக்கிறார். மேலும், மாணவனுடன் கட்டாயத்தின் பேரில் இல்லாமல் தாமாகவே முன்வந்து உறவில் இருந்திருக்கிறார்” என்றெல்லாம் கருத்து தெரிவித்தார். மேலும், வழக்கின் சூழ்நிலைகள் அடிப்படையில் மாணவருக்கு முன் ஜாமீன் வழங்கியும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.