சென்னை..

சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் செல்வபிரகாசம்- லாவண்யா. இவர்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தையொன்றும் இருக்கிறது.
இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் லாவண்யா குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மகனை பார்ப்பதற்காக செல்வபிரகாசம் வீட்டுக்கு சென்றுள்ளார், அங்கு லாவண்யா இல்லை.

குழந்தை இறந்துவிட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வபிரகாசம் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாங்காடு பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

தொடர்ந்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தார், இதனையடுத்து போரூர் உதவி கமிஷனர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், மாங்காடு இன்ஸ்பெக்டர் ராஜி ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பெற்ற மகன் என்றுகூட பாராமல் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததால் லாவண்யாவே கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து தாய் லாவண்யாவையும், அவரது ஆண் நண்பர் மணிகண்டன் என்பவரையும் பொலிசார் கைது செய்தனர்.
கல்லூரியில் படிக்கும்போதே மணிகண்டன்- லாவண்யா பழகி வந்துள்ளனர், இருவருக்கும் வேறொரு நபர்களுடன் திருமணமாகி ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.

நாளடைவில் இருவரும் நெருங்கி பழக, இதை தெரிந்து கொண்ட மணிகண்டனின் மனைவி அவரது அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார். லாவண்யாவும் கணவருடன் சண்டையிட்டு தனியாக வசிக்கத் தொடங்கினார், இருவரும் கணவன்- மனைவி போல் வசித்து வந்துள்ளனர்.

குழந்தை இடையூறாக இருப்பதாக நினைத்த மணிகண்டன் துன்புறுத்தி வந்துள்ளார், சம்பவ தினத்தன்று குழந்தை மணிகண்டனின் செல்போனை தண்ணீரில் போட்டுவிட, கோபமடைந்த மணிகண்டன் குழந்தை சுவற்றில் ஓங்கி அடித்துள்ளார்.

இதனால் குழந்தையின் தலையில் பலமான அடி விழ, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கிருந்து சிகிச்சை முடிந்து வரும்போது, குழந்தை வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது.

கொலையை மறைக்க அவன் தவறி கீழே விழுந்து இறந்து விட்டதாக லாவண்யா அக்கம் பக்கத்தில் தெரிவித்துள்ளார், இதை அவர்களும் நம்பிவிட்டனர். ஆனால் பொலிசாரின் விசாரணையில் உண்மை அம்பலமாகியுள்ளது, இருவரையும் கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர்.















