தோழியை திருமணம் செய்ய கஷ்டப்பட்டு ஆணாக மாறிய பெண் : இறுதியில் காதலி‌‌ எடுத்த பரபரப்பு முடிவு!!

30452

மதுரை..

மதுரையில் தனது தோழியை திருமணம் செய்து கொள்ள ஆணாக மாறிய பெண் தற்போது கலெக்டரிடம் நீதி வேண்டும் என மனு கொடுத்துள்ளார்.

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசுதா. இவர் அடிக்கடி தமுக்கம் பகுதியில் உள்ள பூங்கா முருகன் கோவிலுக்குச் செல்வது வழக்கம். அப்போது அங்கு வாடிக்கையாக வரும் செந்திலா என்பவருடன் நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

செந்திலா ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இடையேயான நட்பு நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக்கின்றனர்.


காதலியை கரம் பிடிக்க ஜெயசுதா கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனையடுத்து தனது பெயரை ஆதிசிவன் எனவும் ஜெயசுதா மாற்றியிருக்கிறார்.

சிகிச்சைக்கு பிறகு திருப்பரங்குன்றம் அருகே உள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதனிடையே தனது மகளை காணாமல் செந்திலாவின் பெற்றோர் தேடி வந்திருக்கின்றனர். திருமணமாகி இரண்டு மாதங்கள் கழித்து தனது பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறியிருக்கிறார் செந்திலா.

ஜெயசுதாவை ஆணாக மாற்றி திருமணம் செய்து கொண்டது குறித்து செந்திலா கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவர்களது வீட்டிற்கு வந்து செந்திலாவின் உடமைகளை எடுத்துச் சென்றிருக்கின்றனர். இந்நிலையில் இதுகுறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செந்திலாவின் பெற்றோர் புகார் அளித்திருக்கின்றனர்.

இந்த புகாரின் அடிப்படையில் இருவரையும் அழைத்து விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகளிடம் செந்திலா ஆதி சிவனுடன் வாழ விருப்பமில்லை என தெரிவித்திருக்கிறார். மேலும் தனது பெற்றோருடன் செல்ல விரும்புவதாக செந்திலா கூறியுள்ளார்.

இதனையடுத்து தனது பெற்றோருடன் செந்திலா சென்றுவிட்டார். காதலுக்காக பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெற்றோரை எதிர்த்து, வீட்டை விட்டு வந்த தனக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறார் ஆதி சிவன்.