படுத்த படுக்கையான தாய்… 2 வாரத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மகள் எடுத்த விபரீத முடிவு!!

3643

ராணிப்பேட்டை…

ராணிப்பேட்டை அருகே, இதய அறுவைசிகிச்சைக்கு பின் படுத்த படுக்கையாய் அவதிப்பட்டு வந்த தாய் தற்கொலை செய்து கொண்டதால், மகளும் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கரிவேடு கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம், ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி ஜோதிலட்சுமி, மகள்கள் வைஷ்ணவி, பவித்ரா மற்றும் பவானிசங்கர் என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜோதிலட்சுமிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் படுத்த படுக்கையாய் ஆன ஜோதிலட்சுமியை அவரது மகள்கள் கவனித்து வந்துள்ளனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல படுக்கை புண்ணால் அவதிப்பட்டு வந்த ஜோதிலட்சுமி மிகுந்த கவலையில் இருந்து வந்துள்ளார்.


இந்த மனவேதனையில் அவர் எடுத்த விபரீத முடிவு குடும்பத்தின் நிலையை தலைகீழாக மாற்றியுள்ளது. மூத்த மகளான வைஷ்ணவிக்கு ஆற்காடு வளவனூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகின்ற டிசம்பர் 5ம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது.

இந்த நிலையில் தான் வீட்டில் யாரும் இல்லாத போது, தாய் மீது அதிக பாசம் கொண்ட வைஷ்ணவியிடம் தனக்கு அரளி விதை அரைத்துக் கொடுத்து விடுமாறு ஜோதிலட்சுமி கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்து போன வைஷ்ணவி, சமாதானப்படுத்த முயன்றும் அது தோல்வியில் முடிந்துள்ளது.

வெறும் 13 நாட்களில் திருமணம் உள்ள நிலையில், தாய்க்கு அரளி விதையை அரைத்து கொடுத்ததோடு தானும் அதை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் வைஷ்ணவி.

இதனைக் கண்ட குடும்பத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டட நிலையில், தாய் ஜோதிலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகள் வைஷ்ணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் மீது கொண்ட பாசத்தால் திருமணத்தையும் மறந்து மகள் அரளி விதை குடித்து உயிருக்கு போராடி வரும் சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.