மட்டக்களப்பில் மர்மமான முறையில் யானை உயிரிழப்பு!

1178

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.

விவேகானந்தபுரம் தளவாய்கல் குளம் பகுதியிலேயே இன்று காலை குறித்த யானை உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் குப்பைகொட்டும் இடமுள்ளதாகவும் அங்குவந்த யானையே இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களதினருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்குவந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.


அத்துடன் யானையின் சடலத்தினை அங்கிருந்து மீட்கும் நடவடிக்கைகளை வனஜீவராசிகள் திணைக்களம் முன்னெடுத்துள்ளனர்.