கேரளாவில்..

கேரளாவில் கொச்சியில் வசித்து வருபவர் 45 வயது சஜீவன் . இவரது மனைவி 35 வயது ரம்யா. இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

சமீப காலமாக மனைவியின் நடத்தையில் சஜீவனுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை , சச்சரவு, தகராறு நடப்பதுண்டு. 2021 அக்டோபர் 16ம் தேதி வாக்குவாதம் முற்றி சஜீவனுக்கு ஆத்திரத்தில் வெறி ஏறியது.

இதனால் சஜீவன் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து பின்னர் வீட்டின் முன் மனைவியின் உடலை புதைத்துள்ளார்.தன்னுடைய அம்மாவைத் தேடிய குழந்தைகளிடம், ‘அம்மா ஓடி விட்டார். வெளியே யாரிடமும் சொல்லாதீங்க.

சொன்னால் நமக்கு தான் அவமானம் . யாராவது அம்மாவை கேட்டால் பெங்களூருக்குப் படிக்கப் போயிருப்பதாக வெளியில் சொல்ல வேண்டும்’ எனக் கூறியிருக்கிறார். பிள்ளைகளும் இதனை உண்மை என நம்பத் தொடங்கிவிட்டனர்.

உறவினர்களும் ரம்யா எங்கே? என கேட்க பியூட்டீஷியன் படித்திருக்கும் ரம்யா பெங்களூருவில் படிக்கப்போனதாகவும், அங்கிருந்து வளைகுடா நாட்டுக்கு வேலைக்குச் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் கடந்த ஓராண்டாக ரம்யா யாரிடமுமே பேசவில்லை. எந்த தகவலும் இல்லை.

இதனால் ரம்யா குறித்து உறவினர்களின் சந்தேகம் அதிகரித்துள்ளது. சஜீவனிடம் அவரின் மனைவி பற்றிக் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவர் இன்னொரு நபருடன் ஓடி சென்றுவிட்டதாகவும் கூறினார்.

அத்துடன் நில்லாமல் மனைவி காணாமல் போய்விட்டார் என காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். கேரளாவில் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டது ஒரு புறம் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

இந்நிலையில், விசாரணை சூடு பிடிக்க தொடங்கியது. அதன்படி ரம்யா காணாமல் போனது குறித்து அவரது கணவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், மனைவியை கொலை செய்து வீட்டின் முன்னர் புதைத்ததை ஒப்புக் கொண்டார். ரம்யாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

இதன் அடிப்படையில் சஜீவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரு ஆண்டாக மனைவியை கொலை செய்து புதைத்து விட்டு அதே வீட்டில் வாழ்ந்து வந்த சஜீவன் குறித்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.















