மாணவி கன்னத்தில் சூடு வைத்த ஆசிரியை : பின்னர் நடந்த விபரீதம்!!

457

திருவண்ணாமலை..

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மணிமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை என 2 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இதே பள்ளியில் கெடாந்தாங்கல் கிராமத்தில் வசித்து வரும் முனியனின் 9 வயது மகள் கௌதமி படித்து வருகிறாள்.

கடந்த 2 நாட்களுக்கு முன் இவள், சரியாக படிக்கவில்லை என தீக்குச்சியை பற்ற வைத்து மாணவியின் முகத்தில் தலைமை ஆசிரியை உஷாராணி சூடு வைத்துள்ளார்.


இதனால் கன்னத்தில் படுகாயம் அடைந்த கௌதமி வீட்டிற்கு அழுது கொண்டே சென்று தாயிடம் முறையிட்டாள். மாணவியின் தாய் மணிமேகலை பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியையிடம் இது குறித்து விசாரித்த போது சரியாக பதில் கூறவில்லை.

இதையடுத்து மணிமேகலை கிராம பொதுமக்களுடன் மங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று பள்ளி தலைமை ஆசிரியை உஷாராணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

படிக்காததால் மாணவியின் கன்னத்தில் சூடு வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.