
ரூ.99 ஆஃபரில் திருமணத்தை கொண்டாட சென்றிருந்த புதுமண தம்பதியர் குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் உயிரிழந்த சம்பவம் தெரிய வந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு குஜராத், ராஜ்கோட்டில் விளையாட்டு மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 32 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
டி.என்.ஏ.பரிசோதனை நடத்தி உடலை கண்டறியும் நிலை உருவாகியுள்ள நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களில் புதுமண தம்பதியரான அக்ஷய், அவரது மனைவி கியாதி மற்றும் மனைவியின் தங்கை ஹரிதா ஆகியோர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்ஷயிக்கும் கியாதிக்கும் மிக சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளது. கனடாவை சேர்ந்த அக்ஷய், நீதிமன்றம் மூலமாக விசா நடைமுறைகளுக்காக கடந்த வாரத்தில் எளிமையாக பதிவு திருமணம் செய்து கொண்டார்.
இந்த ஆண்டு இறுதியில் பெரியளவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்துள்ளனர்.இதற்கிடையில், தங்களது பதிவு திருமணத்தைக் கொண்டாட விளையாட்டு மையத்திற்கு மனைவியையும், மைத்துனியையும் அழைத்து சென்ற போது, தீ விபத்தில் மூவரும் உயிரிழந்துள்ளனர்.

விடுமுறை நாள் என்பதால் விளையாட்டு மைய நிர்வாகம் திடீரென கட்டணத்தை ரூ.99 ஆக குறைத்து ஆஃபர் அறிவித்திருந்ததால், அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.99 ஆஃபர் காரணமாக கூடிய கூட்டம், வெளியில் வர குறுகலான ஒரு வழி என அனைத்தும் ஒரே நேரத்தில் சதி செய்ததால் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.















