ஆந்திர மாநிலத்தில்..

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் வகுப்பறைக்குள் சக மாணவருடன் தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட மாணவியை அவரது பெற்றோர் குடியிருப்புக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த சிறுமிக்கு மகளிர் ஆணையம் பா துகாப்பு அளித்ததுடன், உளவியல் ஆலோசனை அளிப்பதற்காக அதற்கான மையம் ஒன்றில் மாற்றப்பட்டுள்ளார்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் தொடர்புடைய மாணவனின் குடும்ப உறுப்பினர்களுடனும் மகளிர் ஆணையம் விவாதித்துள்ளது.

இருவரும் பாடசாலை மாணவர்கள் என்பதாலும், இருவருக்கும் திருமண வயது எட்டவில்லை என்பதாலும் அந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்றே அதிகாரிகள் தரப்பு அறிவித்துள்ளது.

ஆனால், உண்மையில் சமூக ஊடகங்களில் அதிக வரவேற்பு கிடைக்க வேண்டும் என்பதாலையே, அப்படியான ஒரு திருமண வீடியோவை தாங்கள் பதிவு செய்ததாக மாணவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆந்திராவின் ராஜமுந்திரி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதரவு பெற்ற பாடசாலையிலேயே இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு மாணவர்கள் இருவர் வகுப்பறைக்குள் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த இருவரின் நண்பனே, காட்சிகளை காணொளியாக பதிவு செய்துள்ளான். ஆனால் காணொளி சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்த நிலையில், பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மூன்று மாணவர்களுக்கு எதிராகவும் பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.















