வளர்ப்பு நாய் கடித்ததில் மகன் உயிரிழப்பு.. மன உளைச்சலில் தந்தை மரணம்!!

399

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே பீமலியில், வீட்டில் வளர்த்து வந்த நாய் கடித்ததில் 23 வயதுடைய மகன் பரிதாபமாக உயிரிழந்தார். மகன் உயிரிழந்த சோகத்தில் இருந்து வந்த தந்தை, மகனின் பிரிவைத் தாங்க முடியாமல் நேற்று உயிரிழந்த சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஆந்திர மாநிலம், விசாகப் பட்டினம் மாவட்டம், பீமலி மண்டலம், எகுவபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிங்க ராவ் (55). இவர் போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு பார்கவ் (23) என்கிற மகன் இருந்தார். இவர்களது வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக நாய்ஒன்றை வளர்த்து வந்த நிலையில், கடந்த மாதம் பார்கவை இவர்களது வளர்ப்பு நாய் கடித்துள்ளது.

இதனால் அவருக்கு ரேபிஸ் தொற்று பரவி உயிரிழந்தார். மகனை இழந்த துக்கத்தில் தந்தை நரசிங்க ராவும் படுத்த படுக்கையாகிவிட்டார். இந்நிலையில், அவர் நேற்று மன உளைச்சல் காரணமாக உயிரிழந்தார்.

வளர்ப்பு நாயால் மகன் உயிரிழந்த நிலையில், சோகத்தில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.