ஆன்லைன் செயலி மூலம் தினமும் 400 ரூபாய் கிடைக்குமா?.. உண்மையா.. மோசடியா? திரண்ட மக்கள் கூட்டம்!!

207

ஆன்லைன்..

MYV3Ads என்ற ஆன்லைன் செயலி நிறுவனத்தினர் பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்வதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் அந்த நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு அந்த நிறுவனத்தின் மூலம் மாதம் தோறும் நிலையான வருவாய் பெரும் மக்களும், நிறுவனத் தரப்பும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.

இது தொடர்பாக அந்நிறுவனத்தில் முதலீடு செய்த ஆயிரக்கணக்கானோர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், சுமார் 50 லட்சம் பேர் முதலீடு செய்துள்ள நிலையில் அதிக அளவில் மக்கள் கூடுவார்கள் என்பதை உணர்ந்த MYV3Ads நிறுவனத்தார் தங்கள் முதலீட்டாளர்களைக் கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் திரள அறிவுறுத்தினர்.

அதன்படி இன்று காலை பைபாஸ் சாலையில் மக்கள் அதிக அளவில் குவிந்தனர். லட்சக்கணக்கானோர் முதலீடு செய்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் பேருந்துகள் மூலமாக கோவைக்கு வருவதால் அங்கு அதிக அளவில் மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து முதலீட்டாளர்கள் கூறுகையில், “இது எங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் நிறுவனம்.


எங்கள் வாழ்வாதாரத்தை முடக்கும் நோக்கில் முகாந்திரம் இல்லாமல் பொய்யாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இங்கு கூடியுள்ளோம்” என்றனர். சில தனி நபர்கள் விளம்பர ஆதாயத்திற்காக இப்படி பொய் புகாரை கொடுத்திருப்பதாகவும், இதனால் முதலீட்டாளர்கள் கொதிப்படைந்து திரண்டுள்ளதாகவும் MYV3Ads நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் நிறுவனத்திற்கு எதிராக புகார்களும், குற்றச்சாட்டுகளும் வந்த வண்ணம் உள்ளன.

வழக்கறிஞர் அழகிரிசாமி என்பவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து கூறுகையில், “சட்டப்படி இந்தியாவில் எம்.எல்.எம் மற்றும் பிரமீடு முறை தடை செய்யப்பட்டுள்ளது. அப்பாவி மக்களை ஒரு ஆப் தயார் செய்து தினமும் 8 மணி நேரம் விளம்பரம் பார்க்கவேண்டும் என்று கூறி பணத்தை முதலீடு செய்ய சொல்கின்றனர். இவர்கள் ஆர்பிஐ, செபி ஆகியவற்றில் பதிவு செய்யப்படவில்லை.

மக்கள் கொடுக்கிற பணத்துக்கு ஜிஎஸ்டி வசூலிக்கிறார்கள், ஆனால் ஜிஎஸ்டியை இவர்கள் முறையாக கட்டவில்லை. மதுரையில் ‘வி3ஆன்லைன் டிவி’ என்ற நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டு தற்போது கோவையில் மைவி3ஆட்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலுத்துபவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தினமும் 400 ரூபாய் தருவோம் என்று போலியான வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.