காதல் மனைவி இறந்ததால் உயிரை விட்ட கணவன்.. குடும்பத்தையே அழித்த குடிப்பழக்கம்!!

76

கன்னியாகுமரி : காதல் திருமணம் நடந்து வெறும் 14 மாதங்களில் காதல் மனைவி விஷம் குடித்து உயிரிழந்ததால் விரக்தி அடைந்த கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.. இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே புறாவிளை பழங்குடி குடியிருப்பை சேர்ந்த சுகுமாரன்காணி என்பவருடைய மகள் ஜெனிஷா . 20 வயது ஆகிறது.

இவர் 12ம் வகுப்பு படித்திருந்தார். ஜெனிஷாவும் புறாவிளை மலை தேரியம்மூடு பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் என்பவருடைய மகன் ஜெனீஷ் (25) என்பவரும் காதலித்து வந்துள்ளார்கள்.

இவர்கள் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் ஜெனீசின் பெற்றோர் வீட்டின் அருகே தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர். ஜெனீஷ் வாடகைக்கு கார் ஓட்டி வந்தார்.

ஜெனிஷா குலசேகரம் அருகே திருநந்திக்கரையில் உள்ள ஒரு தையல் பயிற்சி மையத்தில் தையல் படித்து வந்திருக்கிறார். இதற்கிடையே ஜெனிஷுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இதனால் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி ஜெனிஷா தையல் பயிற்சி வகுப்பு முடிந்து மாலையில் வீடு திரும்பி உள்ளார். இரவு 8 மணியளவில் அவர் ஏதோ விஷம் குடித்த நிலையில் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவரது தாயார் ஜெயாவுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து தாயார் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.


அப்போது ஜெனிஷா வாயில் நுரை தள்ளிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், அவர் இறந்து விட்டதாகவும் தாயாரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் ஜெனிஷா தற்கொலை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள்.

இதற்கிடையே ஜெனிஷாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது உறவினர்கள் ஆண், பெண் என ஏராளமானோர் திரண்டு குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனிடையே திருணமாகி 14 மாதங்களே ஆகியுள்ளதால் பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. தமிழரசி , ஜெனிஷாவின் மரணம் குறித்து விசாரித்து வந்தார், இந்நிலையில் மனைவி தற்கொலை செய்ததால் ஜெனிஷ் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

மேலும் அவர் தினமும் அதிக அளவில் மது குடித்து வந்தாராம். இந்தநிலையில் மனைவி இறந்ததால வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜெனிஷ் கடந்த ஏப்ரல் 7-ந் தேதி வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார்.

அவரை குடும்பத்தினர் மீட்டு குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெனிஷ் நேற்று முன்தினம் இரவு இறந்துபோனார்.

இதையடுத்து குலசேகரம் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் ஜெனிஷின் உடலை கைப்பற்றி குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் மனைவி தற்கொலை செய்த துக்கத்தில் கணவரும் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குலசேகரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.